ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான் –
எனது அனுபவம் 1982-1988
இரவு 8 மணிக்குப் பின் எங்கோ இருந்து இந்தியப்படையின் உயர் அதிகாரி ஒருவன் வந்தான். அவன் கொஞ்சம் தமிழ் மொழி கலந்து ஏதோ ஒரு மொழியில் பேசினான். மலையாளமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்களுக்கு ஓரளவிற்கு விளங்கியது அவன் பேசுவது. பின் கட்டை அவிழ்த்து விட்டு சாப்பாடு தந்தார்கள். ஆஹா அதுதான் சாப்பாடு ஏதோ ஒரு கிழங்கு அதற்குள் மஞ்சள் போட்டு ஒரு டாங் டாங்.கறி.*(குறிப்பு டாங் டாங் என்பது ஒரு சேட்டின் பெயர். ரெம்பப் பெரிதாக இருக்கும் அதுபோலத்தான் எமது இயக்கத்திலும் சில நேரங்களில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடான நேரங்களில் சமைப்போம்.) அதற்குள் இருக்கும் கிழங்கை சுளியோடித்தான் தேடி எடுக்க வேண்டும். அந்தக் கறியுடன் இரண்டு சப்பாத்திக்களும் தந்தார்கள். என் வாழ்க்கையில் சப்பாத்தி என்று முதன் முதலில் கண்டது அன்றுதான்.
சாப்பிட்டு முடிந்ததும் எங்களை ஒரு இடத்தில் இருத்து வைத்து அந்த அதிகாரி நீங்கள் ஒரிஜினல் எல்ரீரீ என்று நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள் ஆதலால் உங்கள் தலைவர் இருக்கும் இடத்தை சொன்னால் விட்டு விடுவோம் இல்லையெனில் எமது பிரதான முகாம் இருக்கும் பலாலிக்கு அனுப்பி விடுவோம். என்று கடும் தொனியில் கூறினான். நாங்கள் இயக்கம் என்று சொல்லவில்லை என்று வாதிட்டோம். அதன்பின் அந்த அதிகாரி இரவு 10 மணியளவில் புறப்பட்டு விட்டான். அவன் போனதும் எங்களை இருவராக இணைத்து சங்கிலியால் பூட்டி வெறும் தரையில் படுக்க வைத்தார்கள்.
மறுநாள் காலை 5 மணியளவில் எல்லோரையும் அவர்களது சப்பாத்துக் கால்களால் உதைத்து எழுப்பினார்கள். நாங்கள் எழும்பியதும் அவர்களது மலசலகூடங்களைக் கழுவ விட்டார்கள். யப்பா அந்தக் கொடுமையை எழுதவில்லை அவ்வளவு கேவலம். இப்படியாக ஒவ்வொரு நாளும் போனது சில நேரங்களில் அவர்களுக்கு எங்கேயாவது இழப்பு வந்தால் எம்மீது தாக்குதல் நடத்துவார்கள். 16 நாட்களின் பின் எனது அப்பா மனித உரிமைகள் நிறுவனத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கிணங்க எங்கள் 7 பேரையும் விடுதலை செய்தார்கள். வீட்டிற்கு வந்தால் அங்கு உணவுக்கு பணம் இல்லாததால் பெரும் கஸ்ரத்தில் இருந்தார்கள். மறு நாளே நான் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டேன். இரவில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தென்னந்தோப்புக்களில் உறங்குவோம். மறுநாள் காலை எழுந்து பிரச்சினை ஒன்றும் இல்லை என்றால் வீட்டிற்கு வந்து எமது கடமைகளைச் செய்வோம்.
இப்படியே காலம் ஓடி 1988 ம் ஆண்டும் பிறந்து ஜூன் மாதம் எமது சொந்த இடத்திலிருந்து எமக்குக் கடிதம் வந்தது எங்கள் காணிகளில் வீட்டுத்திட்டம் கொடுத்து வீடு கட்டுகிறார்கள் உடனடியாக வந்து பதியும்படி. கட்டாயம் நாங்கள் அங்கு போயே ஆகவேண்டும். அதனால் நானும் அப்பாவும் அக்காவும் எமது சொந்த இடமான திருகோணமலைக்குப் புறப்பட்டோம். அம்மாவும் தங்கையும் தம்பிகள் இருவரும் பளையில் இருந்தார்கள் படிப்பதனால் அவர்கள் வரமுடியாத நிலை. இப்போது ஆணையிறவு இலங்கை இராணுவம் சோதனை கைது என்று எதுவும் செய்வது இல்லை. இந்திய இராணுவம்தான் அதைச் செய்தார்கள். திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்குமான பேரூந்து சேவை நேரடியாக நடந்தது. அதனால் நாங்கள் பேரூந்தில் பயணித்தோம் இடையிடையே பல இடங்களில் இந்தியப் படையினர் இறக்கி தலையாட்டிகளின் முன் நிறுத்தி பரிசோதனை செய்து அனுப்பினார்கள். ஒரு பிரச்சினையும் இல்லாமல் திருகோணமலையை வந்தடைந்தோம்.
சொந்த இடத்திற்கு வந்ததும் அளவில்லா சந்தோசம். அங்கு எல்லாக் குடும்பங்களையும் ஒன்று சேர்த்து ஒரு இடத்தில் முகாமாக அமைத்து தகரக் கொட்டகைகள் அமைத்து இருந்தார்கள். எங்களுக்கும் தகரங்கள் தந்து நாங்களும் சிறு கொட்டகை அமைத்து இருந்தோம். இங்கு வீடுகள் கட்டுவதால் கல் மணல் என்று தேவை இருந்தது இதை அரசாங்க அதிகாரிகளால் முன்னெடுத்திருந்தார்கள் அதனால் நாங்கள் காடுகளில் கல் மணல் எடுத்து அவர்களுக்குக் கொடுக்கும் வேலையில் இணைந்து செய்தோம். நல்ல சம்பளமும் கிடைத்தது.
காடுகளில் வேலை செய்வதால் அடிக்கடி எமது இயக்கப் போராளிகளைச் சந்திப்பேன். அவர்களுடன் நல்ல நட்பில் இருந்தேன். இது எல்லோருக்கும் தெரியாது தெரிந்தால் காட்டிக் கொடுத்து விடுவார்கள்.
இப்படியே சில மாதங்கள் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் ஓடியது. 1989ம் அண்டும் பிறந்து மூன்று மாதங்கள் போனது ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் எமது இருப்பிடத்தை இந்தியப் படையினரும் தமிழ் ஒட்டுக்குழுக்களான EPRLF, EPDP, ENDLF, PLOT; TELO, ஆகியோர் இணைந்து சுற்றிவளைத்து அனைவரையும் ஓர் இடத்தில் இருத்தி வைத்தனர். பெண்கள் குழந்தைகள் முதியோர் என்று எவரையும் விட்டு வைக்கவில்லை. குழந்தைகள் அந்தந்த இடத்திலேயே மலசலங்களைக் கழித்தனர்.
தமிழர்களின் விடுதலைக்கு போராடுகிறோம் என்று தொடங்கி கடைசியில் தமிழர்களுக்கே எதிரியாக மாறி ஒட்டுக் குழுக்களாக வந்து அங்கு நடந்த மனித அவலங்களைப் பார்த்து இரசித்து சிரித்து மகிழ்ந்ததைப் பார்த்தேன். இப்படி எந்த ஒரு மனித இனத்திலும் நடந்திருக்காது. தனது இனத்தின் அவல நிலையைப் பார்த்து இரசிக்கும் இந்த மானம் கெட்ட இயக்கங்கள் செய்த செயல்கள். அங்கு பெண்களுக்கு எவ்வளவு பிரச்சினைகளை என்னால் அவதானிக்க முடிந்தது. எனது சகோதரியின் கண்களில் கண்ணீரை மட்டுமே காண முடிந்தது அம்மா பக்கத்தில் இருந்திருந்தால் அவரிடமாவது அக்கா தனது பிரச்சினைகளைக் கூறியிருப்பார். அக்காவின் அழுகைக்கு அர்த்தம் என்னால் அப்போது புரிய வில்லை. ஒரு முதியவர் அந்த இடத்திலேயே மலம் கழித்து விட்டார். அவரை கையில் பிடித்து இழுத்துக் கொண்டு போய் 15 மீற்றர் தூரத்தில் போட்டார்கள் அவருக்குத் தண்ணீர் கூடக்கொடுக்கவில்லை. அந்த ஒட்டுக் குழுக்கள்.
பின் காலை 9 மணியளவில் பல வாகனங்களில் ஒட்டுக்குழுக்களின் பொறுப்பாளர்களும் இந்தியப் படையினரின் பொறுப்பாளர்களும் வந்து பேசினார்கள். அவர்கள் பேசிய விடயம்.TNA, CVF, என்று தமிழ் ஆயுதக் குழுக்களை உருவாக்கவுள்ளோம் இங்குள்ள அனைத்து இளைஞர்களும் வரும் 10 நாட்களில் நீங்களாக வந்து அந்தப் படையில் சேர வேண்டும் இல்லையெனில் கட்டாயம் எல்லோரையும் பிடித்து பயிற்சி கொடுத்து சேர்த்துவிடுவோம். என்று கூறி விட்டுப் போய் விட்டனர். அதன் பின் சுற்றி வளைத்து இருந்த படையினரும் ஒட்டுக் குழுக்களும் நான் உற்பட அங்கிருந்த 35 வயதுக்கு உற்பட்ட சகல ஆண்களின் முழு விபரங்களையும் பதிவு செய்து புகைப்படமும் எடுத்துக்கொண்டு 11 மணியளவில் அங்கிருந்து போய்விட்டனர். எங்களுக்கோ விடுதலை கிடைத்தாற்போல் சந்தோசம்.மறுபக்கம் பயம். இதற்குப் பிறகு நான் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டேன்..
தொடரும்..
நன்றி.
வே.சுபாஸ் தமிழீழம்.
பாகம் 01 பார்வையிட
பாகம் 02 பார்வையிட
பாகம் 03 பார்வையிட
பாகம் 04 பார்வையிட
பாகம் 05 பார்வையிட
பாகம் 06 பார்வையிட
பாகம் 07 பார்வையிட
பாகம் 08 பார்வையிட
பாகம் 09 பார்வையிட
பாகம் 10 பார்வையிட
பாகம் 11 பார்வையிட