ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான்
எனது அனுபவம் 1982 (பகுதி 02)
எல்லோரும் அந்தத் தமிழ்கிராமத்தில் பாடசாலை ஒன்றில் தங்கியிருதோம். சில நாட்களின் பின்னர் எனது அப்பாவின் நண்பர் ஒருவரின் வீட்டில் நாங்கள் தங்கினோம். சில நாட்களின் பின்பு அங்கு வீதியோர சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் “சிங்கள பொலிஸ் இராணுவத்தினருடன் பழகுபவர்கள் உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் மரணதண்டனை விதிக்கப்படும்” என்று சிவப்பு எழுத்தினால் எழுதப்பட்டு இருந்தது. அப்போதுதான் எங்களுக்கு அங்குள்ளவர்கள் சொன்னார்கள் யாரோ மண்டையில் போடுற குறூப்பாம். . (குறிப்பு அந்த நேரத்தில் சகல இயக்கங்களும் ஒன்று இரண்டு பேராக செயல்பட்ட காலம். எந்த இயக்கம் என்று தெரியாது.) ஆனால் இயக்கங்கள் பற்றிய தெளிவு யாரிடமும் இல்லாத காலம்.
பின்பு சில மாதங்கள் கடந்தன. அகதியென்ற பெயருடன் வாழ்ந்தோம். ஒரு நாள் இரவு நாங்கள் இருந்த வீட்டிற்கு அருகில் மூன்று துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்டது. காலையில் எழுந்து நாம் இருந்த வீட்டுக்காரரும் எனது அப்பாவும் வயலுக்குப் போவதாகக் கூறிவிட்டுப் போனார்கள். ஆனால் உடனே திரும்பி வந்து விட்டனர். அவர்களிடம் ஏன் என்று கேட்ட போது யாரோ ஒருவரை மின்சாரத் தூணில் கட்டிவைத்துச் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்றார்கள். எங்களுக்கெல்லாம் பயம் அதிகரித்து விட்டது. எனக்கு ஒரு ஆசை அதைப்பார்க்க வேண்டும் என்று. நான் அப்பாவிடம் சொல்ல சரி என்று நானும் அப்பாவும் போய்ப் பார்த்தோம்.
எனக்கு கைகால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது. ஆம் அவனது கழுத்தில் “நான் ஒரு துரோகி” என்று எழுதப்பட்ட மட்டையை தொங்க விட்டிருந்தனர். பின்னர் காலை 8 மணியளவில் அந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு இராணுவமும் பொலிசாரும் இணைந்து சுற்றி வளைத்து சகல ஆண்களையும் கூட்டிக் கொண்டுபோய் மாலை 6 மணிவரை தடுத்து வைத்து கடுமையான சித்திரவை செய்தனர். அதில் எனது தந்தையும் மாட்டி விட்டார்,. பின்னர் 11 பேரை தடுத்து வைத்து விட்டு மிகுதிப் பேரை விடுதலை செய்து விட்டனர். இன்றுவரை அந்தப் 11 பேரின் தகவல் ஏதுவும் இல்லை. பின் அந்தச் சடலத்தை எடுத்துக் கொண்டு போய் விட்டனர். மண்டையில் போடப்பட்டவர் பக்கத்துக் கிராமத்தில் இருப்பவர் என்றும் அவர் பொலிசாருக்குத் தகவல் கொடுப்பவர் என்றும் பின்னர் அறிந்தோம்.
ஆமாம் எனக்கு அந்தச் சம்பவம் ஒரு புது வித அனுபவமாக இருந்தது. பயமாக இருந்தாலும், கண்ணுக்கு எட்டாத தூரத்தில் ஓர் உணர்வு என்னுள் புகுந்து கொண்டதை உணர்ந்து கொண்டேன். அந்தச் சம்பவத்தில் இராணுவம் அடித்ததில் எனது தந்தைக்கு கடுமையான காயங்கள் எற்பட்டது. எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சில மாதங்கள் கடந்தது. 1983 ம் ஆண்டும் பிறந்து 2 மாதங்கள் கடந்து விட்டது. என்றும் பயத்துடனேயே எமது வாழ்க்கை ஓடியது. ஒரு நாள் எமது சொந்தக் கிராமத்துக்கு வந்து கட்டாயம் குடியேற வேண்டும் இல்லாவிட்டால் சிங்களவர்களுக்கு காணிகளைக் கொடுக்கப்போவதாக அரசாங்க அதிபரால் செய்தி அனுப்பப் பட்டது. இதை அறிந்து மீண்டும் எங்கள் சொந்தக் கிராமத்தில் சிறு குடிசைகள் அமைத்துக் குடியேறினோம். எங்களுக்கு எந்தவித உதவிகளும் யாரும் செய்யவில்லை மிகவும் கஸ்ரப்பட்டோம். விறகு வெட்டி அதை விற்று வரும் பணத்தில் எமது குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டோம்.
இப்படியே உயிர்ப் பயத்திலும் வறுமையிலும் வாழ்ந்து கொண்டு இருக்கும் போது எனது தாயாரின் தந்தையும் இன்னுமொருவரும் வெளி வேலை ஒன்றுக்காகச் சென்றுவிட்டு வீடு திரும்பி வரும் போது மாலை 7 மணியிருக்கும் அந்த இரண்டு பேரையும் சிங்களவர்கள் பிடித்துத் துண்டு துண்டாக வெட்டி அருகிலுள்ள வயலில் போட்டு விட்டனர். பின் போனவர்களைக் காணவில்லை என்று எனது அப்பா உற்பட சிலர் தேடிச் சென்ற போது வயல்வெளியில் துண்டு துடுண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை சாக்குப் பைகளில் போட்டுக் கொண்டு வந்தனர். அந்த உடல்களைப் பார்த்தவுடன் எனக்குப் பயமா அல்லது வெறுப்பா அல்லது பழிதீர்க்க வேண்டும் என்ற உணர்வோ தெரியவில்லை.
நான் இளவயதாகவே இருந்தேன். அந்த நேரத்தில் எனது அக்காவும் வயதுக்கு வந்து விட்டார். எங்கள் குடும்பம் சொல்லென்னா துயரத்தில் இருந்தோம். இப்போது அப்பாவிற்கு அக்காவை நினைத்துப் பயம் வேறு ஏன் என்றால் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்கள் நிறையவே நடந்தது..
நன்றி .
தொடரும்…..
வே,சுபாஸ் தமிழீழம்.
பாகம் 01 பார்வையிட