ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான் – பாகம் 01
எனது அனுபவம் (1982 பகுதி 01)
1982 அன்று நடந்த எனது முதல் அனுபவம்.
எமது கிராமத்தில் ஒரு சிங்களக் குடும்பமும் 30 தமிழ் குடும்பங்களும் இருந்தோம். ஒருநாள் காலையில் அந்தச் சிங்களக் குடும்பத்திலிருந்து ஒரு மகனும் 5 பொலிசாரும் ஒரு ஜீப் வண்டியில் எமது கிராமத்தைச் சுற்றி அவதானிதுச் சென்றனர். இதை அறிந்த ஊர் ஆண்கள் எல்லோரும் ஒன்று கூடி பொலிசாரும் சிங்களவனும் வந்து போனது சந்தேகமாக உள்ளது என்றும் நாம் இன்று இரவு எங்கள் வீடுகளில் தங்கக் கூடாது என்றும் முடிவு செய்தனர். (அப்போது நான் சிறுவனாக இருந்தேன்). அதன்படி இரவாகிக் கொண்டிருக்கும்போது எல்லோரும் உணவு உண்டபின் அருகிலுள்ள காட்டில் இரவு 7 மணியளவில் ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் அனைவரும் தங்கினோம்.
பின்னர் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என்று பலரும் உறங்கி விட்டனர். அதில் நானும் உறங்கி விட்டேன். ஆண்கள் கண் விழித்து அவதானித்துக்கொண்டிருந்தனர். நல்லிரவு ஒரு மணியளவில் தூரத்தில் வாகனங்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் திடீரென ஒரு வீடு திப்பற்றி எரிந்தது. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக எல்லா வீடுகளும் எரிந்தது. அத்துடன் சிங்களத்தில் படு தூசன வார்த்தைகளால் பேசியவாறு துப்பாக்கியால் சுட்டனர். அந்தச் சத்தத்தில் குழந்தைகள் பெண்கள் எல்லோரும் எழுந்து கத்தத் தொடங்கி விட்டனர். பிறகு அங்கிருந்து வெளியேறி தூரமான இடத்திற்கு போய் விட்டோம்.
காலை விடிந்ததும் ஆண்கள் சென்று பார்த்த போது சகல உடைமைகளும் எரிந்து நாசமாகிப்போயிருப்பதைப் பார்த்து மனமுடைந்து போய் விட்டனர். அந்த நேரம் எங்களிடம் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன. அதில் மிச்சமாக கால்வாசி ஆடுகளை மட்டும் விட்டுவிட்டு,மீதி ஆடுகளையும் வீட்டிலிருந்த விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டனர். இதுபோல மற்றையவர்களின் சொத்துக்தளும் சூரையாடப்பட்டன. அன்று நாங்கள் வீடுகளில் தங்கியிருந்தால் பலர் உயிரிழந்திருப்பர்.
காலையில் பொலிசாரிடம் முறையிடச் சென்றவர்களை, எனது தந்தை உற்பட அனைவரையும் ஜெயிலில் போட்டு கடுமையாகத் தாக்கினார்கள். “நீங்களே வீடுகளைப் பற்றவைத்து விட்டு இனக்கலவரத்தை உண்டுபண்ணப் பார்க்கிறீர்கள்” என்று வழக்குப் பதிவு செய்தனர். (பின்னர் 10 வருடங்கள் கழித்து அந்த வழக்கு தள்ளுபடியாகிவிட்டது.)
அதன் பின் மறு நாள் எமது சொந்த மண்ணை விட்டு பக்கத்துக் கிராமத்தில் தஞ்சம் புகுந்தோம். அந்தக்கிராமத்தில் முழுவதும் தமிழர்களே அவர்களால் எமக்கு முதன் முதலில் வைக்கப்பட்ட பெயர் அகதிகள்.
குறிப்பு:- இதில் பாதுகாப்பு கருதி உண்மையான பெயர்கள் குறிப்பிடப்படவில்லை .
தொடரும்…..
வே.சுபாஸ் தமிழீழம்.
நன்றி.