ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான் – பாகம் 07
எனது அனுபவம் 1982-1985
லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர்.. ஆமாம் நான் என் வாழ்க்கையில் கண்ட முதல்த் தளபதி. அவருக்கு முதலில் எனது வீரவணக்கங்கள்.
அவரைக் கண்டதும் எனக்குப் பயம் ஒருபக்கம் மகிழ்ச்சி ஒருபக்கமாக இருந்தது.அந்த முகாமில் சுமார் 20 பேர்வரை இருந்தனர். மாஸ்ரர் எம்மோடு அன்போடு பேசினார். அப்போது எனது அப்பா மாஸ்ரரிடம் எனது மகனை உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்கு மாஸ்ரரோ அவருக்குச் சின்ன வயதாகிறது பயிற்சி எடுக்க மாட்டார் அத்துடன் பயிற்சிக்கு இந்தியாவிற்குத்தான் அனுப்ப வேண்டும் தற்போது கடல்வழிப் போக்குவரத்து மிகவும் கஸ்ரமாக உள்ளதால் அவரைக் கூட்டிப்போவது கஸ்ரம் என்றார். அத்துடன் நீங்கள் இங்கு இருக்க வேண்டாம். முல்லைத்தீவுக்குப் போங்கள் அங்கு கொஞ்சம் பாதுகாப்பு இருக்கும் என்றார். சரி என்று நாங்களும் அங்கிருந்து முல்லைத்தீவுக்குப் புறப்படலாம் என்று இருந்தோம்.
அம்மா சகோதரர்களுக்கு தகவல் அனுப்பி அவர்களைச் சந்தித்து விட்டுப் புறப்படலாம் என்று இருக்கையில் சாம்பல்தீவு மற்றும் சிறுபிட்டிக் கிராமம் உற்பட அந்தப்பகுதி முழுவதையும் இராணுவம் சுற்றிவளைத்து தாக்குவதற்கு முன்னேறி வந்தனர். இதை அறிந்த மாஸ்ரர் உற்பட அனைத்துப் போராளிகளும் இராணுவத்தை வழிமறித்துத் தாக்குவதற்கு தயாரானார்கள். எனக்கு அதில் சந்தோசமாக இருந்தது. சண்டை நடக்கப் போகிறது பார்க்கலாம் என்று. பெரும்பாலும் பகல் முழுவதும் நான் அவர்களது முகாமிலேயே தங்குவேன். உணவும் அவர்களுடன் சேர்ந்துதான் உண்பேன். இரவாகும் போது என்னை அப்பாவுடன் அனுப்பி விட்டு அவர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்று விடுவார்கள். பின் மறுநாள் காலையில் வந்து விடுவார்கள்.
அன்று காலை 5.30 மணியளவில் சகல போராளிகளும் நாம் இருந்த வீட்டிற்கு மிக அருகில் நிலையெடுத்துப் பதுங்கியிருந்தனர். மக்கள் அனைவரையும் வெளியேறும்படி கூறினார்கள். நாங்கள் அங்கிருந்து வெளியேறி சற்றுத் தூரத்தில் ஓர் பாடசாலையில் தங்கியிருந்தோம். காலை 8 மணியளவில் திடீரென துப்பாக்கி மற்றும் குண்டுச்சத்தங்கள் கேட்டது. எமது தலைக்கு மேலாக இராணுவம் சுடும் ரவைச்சன்னங்கள் கூவிக்கொண்டு போனது. நாங்கள் அனைவரும் தரையில் விழுந்து படுத்து விட்டோம். சுமார் ஒரு மணிநேரம் சண்டை நடந்தபின் ஓய்ந்து விட்டது. பின் நானும் அப்பாவும் போய்ப் பார்த்தோம். எமது போராளிகளில் ஒருவர் சிறு காயமடைந்து மருந்து கட்டி மீண்டும் இராணுவத்தினருடன் போரிடத் தயாராக நின்றார். எனக்கு அவரைப்பார்த்ததும் அதிசயமாக இருந்தது. அவரது காலில் காயம் மருந்து கட்டியும் இரத்தம் வந்து கொண்டு இருக்கையில் மீண்டும் சண்டைக்குத் தயாரான நிலையில் நின்றார். அதுதான் தமிழீழ விடுதலைப் புலிகள்..
நாங்கள் போராளிகளிடம் போனதைக் கண்டு இன்னும் சில இளைஞர்களும் வந்தனர் எல்லோரும் சேர்ந்து போராளிகளுக்கு உணவு தயாரித்துக் கொடுத்தோம். பின் 10.00 மணியளவில் சண்டை நடந்த இடத்தில் முன்னேறிச் சென்று 2 துப்பாக்கிகளைக் கைப்பற்றி வந்தனர்.
பின் அங்கிருப்பது பாதுகாப்பில்லை என்று சிலர் அங்கிருந்து வெளியேறினர். போராளிகளும் இரண்டு நாட்கள் கழித்து வேறு இடத்திற்குப் போய் பின்னர் வருவதாகச் சொல்லிப் புறப்பட்டு விட்டனர்.
பின் இரண்டு நாட்கள் கழித்து என்னை அப்பாவிற்குத் தெரிந்த குடும்பத்துடன் சேர்ந்து சாம்பல் தீவில் ஒருவரின் படகிற்கு பணம் கொடுத்து முல்லைத்தீவிற்கு போகச் சொன்னார். அப்பா வரமுடியாத நிலை அம்மா சகோதரர்களைப் பார்க்க வேண்டும் அதற்காக.
இரவு பத்து மணியளவில் வுலூஸ்டார் படகு மூலம் சாம்பல் தீவிலிருந்து புறப்பட்டேன். கடல் பயணம், தனிமை, இரவு எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. வானத்தில் நட்சத்திரம் கூடத் தெரியவில்லை மழை மேகங்கள் சூழிந்திருந்ததால் வெளிச்சம் என்பது கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. படகில் 15 கோஸ்பவர் என்ஜின் பொருத்தி ஓடினார்கள். சிலருக்கு வாந்தி வந்து படகையே ஒருவழி பன்னிவிட்டனர். ஆனால் எனக்கு அந்தப்பிரச்சினை ஒன்றுமில்லை. ஆனால் புதுப் பயணம் என்பதால் உள்ளுக்குள் நடுக்கம். உறவுகள் அற்ற நிலையில் தனிமைப் பயணம்.
அரைவாசித் தூரம் வந்துகொண்டிருக்கையில் கொக்குத்தொடுவாய் இராணுவ முகாமின் வெளிச்சம் தெரிந்தது. அதன் பின் அதிகாலை 3 மணியளவில் முல்லைத்தீவு செம்மலை கடற்கரையை வந்தடைந்தோம்.
மாவட்டம் கடந்து மாகாணம் கடந்து எமது சொந்த நிலத்தை விட்டு இன்னுமொரு மாகாணத்தில் கால் பதிக்கும் போது மனதிற்குள் தாங்கமுடியாத வேதனை வாட்டியெடுத்தது.
தரையிறங்கியதும் அங்கிருந்த மீனவர்கள் எம்மை வரவழைத்து உடனே மீன் கறியுடன் உணவு தந்தனர். அதை வாழ்நாளில் மறக்க முடியாது. பின் கடற்கரையில் உறங்கினோம். ஒரு பாதுகாப்பு உணர்வுடன்.
எனது தனிமைப் பயணம் தொடங்கியது.
நான் போகவேண்டிய இடம் பளை அங்குதான் எனது அப்பாவின் நண்பர் குடும்பத்தினருடன் இருக்கின்றார். பின்னர் காலை 8 மணியளவில் அங்கிருந்த ஒருவரிடம் நான் பளைக்குப் போகவேண்டும் அதற்கு உதவி செய்யக் கேட்டதும் அவர் மாலை 3 மணிக்குப் பிறகு இங்கிருந்து உழவு இயந்திரம் ஒன்று பளைக்குப் புறப்படும் அதில் ஏற்றி விடுகிறேன் என்றார். எனக்குச் சந்தோசமாக இருந்தது. நான் அவரது வீட்டில் நின்று பிற்பகல் 3 மணியளவில் உழவு இயந்திரம் வந்ததும் ஏறிப் பயணம் செய்தேன். அந்த வீதி எங்கும் குண்றும் குளியுமாக இருந்தது உழவு இயந்திரத்தில் பயணம் எப்படியிருக்கும் .அனுபவமுள்ளவர்களுக்குப் புரியும்.
மாலை ஐந்து மணியளவில் உழவு இயந்திரத்துடன் நானும் விஸ்வமடுவை வந்தடைந்தேன்.
பின் அங்கிருந்து காட்டுப்பாதையூடாக ஆணையிரவுப்பகுதியைக் கடந்து செல்ல வேண்டும் என்றனர். ஏன் என்றால் ஆணையிரவு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.அதனூடாகப் போக முடியாது.
அங்கிருந்த கடையில் உணவு பார்சல் கட்டி எடுக்கும்படி கூறினார்கள். நானும்ஙண உணவு கட்டியெடுத்துக் கொண்டு புறப்பட்டோம். சுமார் ஒரு மணிநேரம் காட்டிற்குள் பயணத்தின் பின் பறந்தவெளிப் பிரதேசம் வந்தது. எங்கும் மணல் திட்டிகளும் தண்ணீருமாகக் காட்சியழித்தது. ஊரியான் பாதை, கொம்படிப்பாதை, என்று என்னமோ எல்லாம் கூறினார்கள் எனக்குப் பயம் வரத் தொடங்கியது அங்கிருந்து பார்க்கும் போது தூரத்தில் ஆணையிரவு படைத்தளம் தெரிந்தது. அங்கிருந்து உலங்கு வாநூர்தியில் வந்து படையினர் பல பொது மக்களைச் சுட்டுக் கொண்றுள்ளனராம்.
பின் இரவு 10 மணிக்குப் பிறகு புறப்படலாம் என்றனர். சரியென்று இருக்கும் போது மழை பெய்யத் தொடங்கியது எனது உடைமைகள் அனைத்தும் நனைந்து நான் கட்டிக் கொண்டு போன சாப்பாடும் நனைந்து விட்டது. சாப்பாடு என்னவென்றால் பாணும் மீன் குழம்பும். பாண் நனைந்து மூன்று மடங்து பெரியதாகி விட்டது மற்றவர்களுக்கு அங்கு உள்ள நிலைமைகள் தெரியும். நான் புதிது வயதிலும் குறைவு என்பதால் என்னால் எதையும் ஊகித்துச் செயல்பட முடியவில்லை. அத்துடன் தனிமை (பாவிகள் போகிற இடமெல்லாம் பள்ளமும் திட்டியுமாம்) ,, இது பழமொழி . இங்கு நான் பாவியா.???
தொடரும்……
நன்றி,
வே.சுபாஸ் தமிழீழம்
24.10.2020
பாகம் 01 பார்வையிட
பாகம் 02 பார்வையிட
பாகம் 03 பார்வையிட
பாகம் 04 பார்வையிட
பாகம் 05 பார்வையிட
பாகம் 06 பார்வையிட