ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான் – பாகம் 07
எனது அனுபவம் 1982-1986
பாவிகள் போகுமிடமெல்லாம் பள்ளமும் திட்டியுமாம். என்று நம் முன்னோர்கள் சொல்லும் பழமொழி போல் நான் போகும் பாதை எங்கிலும் வேதனைகளும் சோதனைகளுமாகவே இருந்தது. அன்று எனது சாப்பாடு முழுவதும் நனைந்து விட்டது. பாண் நனைந்து பெரிதாக இருந்தது. அதைப் பிளிந்து சாப்பிட்டு விட்டு இரவு பத்து மணியளவில் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தேன்.
உழவு இயந்திரத்தில் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் போது நல்ல இருட்டு, மழை, வெளிச்சம் பாவிக்க முடியாது. பக்கத்திலிருப்பவர்கூடத் தெரியாது அப்படி இருள். சென்றுகொண்டிருக்கும் போது ஒரு இடத்தில் எமது உழவு இயந்திரம் மணலில் புதைந்து விட்டது. மிகவும் சிரமப்பட்டுப் பின் சுமார் இரண்டு மணிநேரப் போராட்டத்தின் பின் புதையுண்ட உழவு இயந்திரத்தை எடுத்தார்கள். மீண்டும் தொடர்ந்து பயணித்து அதிகாலை நான்கு மணியளவில் இயக்கச்சிப் பகுதிக்கு வந்தோம். அங்கு எமது இயக்கப் போராளிகளைச் சந்தித்தோம். பின் காலை ஏழு மணியளவில் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து பளையை வந்தடைந்தேன்.
பளைக்கு வந்து விட்டேன் அப்பாவின் நண்பரின் பெயர் மட்டும் ஞாபகம் இருக்கிறது. முழு விபரமும் எழுதி வந்தேன். அது அன்றிரவு பெய்த மழையில் நனைந்து எங்கோ தவறிவிட்டது. பளையில் என்னை இறக்கி விட்டு உழவு இயந்திரத்தில் வந்தவர்கள் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டு விட்டார்கள்.
அங்கு போராளிகளின் அலுவலகம் இருந்தது அவர்களிடம் போய் எனது கதைகள் எல்லாவற்றையும் கூறினேன். அவர்கள் பொறுமையாகக் கேட்டுவிட்டு காலை உணவும் தந்து அங்கு உதவிக்கு நின்ற ஒரு பொது நபரை என்னுடன் அனுப்பி வைத்தனர். பத்து மணியளவில் அவருடன் சேர்ந்து தேடினேன் தேடினேன் கிடைக்கவே இல்லை. மாலையாகி விட்டது. மீண்டும் போராளிகளின் அலுவலகத்திற்கு வந்து அவர்களுடன் அன்றிரவைக் கழித்து மீண்டும் மறுநாள் தேடுதலைத் தொடர்ந்தேன்.
மறுநாள் காலை தேடி பிற்பகல் இரண்டு மணியளவில் பளை தம்பகாமம் என்ற இடத்தில் அப்பாவின் நண்பரைச் சந்தித்தேன். ஆஹா சந்தோசம் ஆனால் அவரை நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் வீட்டிற்கு வந்து போது பார்த்துள்ளேன். எனக்கு ஓரளவிற்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் அவரோ என்னைக் கண்டதும் வியந்து பார்க்க ஆரம்பித்து விட்டார். ஒருவழியாக அறிமுகமாகினோம்.
அவரது வீடோ சிறியதாக பனை ஓலையால் வேயப்பட்டிருந்தது. அவருக்கு நான்கு பெண் பிள்ளைகளும் இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.
பெண்பிள்ளைகளில் மூன்றுபேர் வயதுக்கு வந்த பிள்ளைகள். என் நிலையோ பெரும் சங்கடத்தில். அவரோ எங்கள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்ததால் என்னையும் அவரது பிள்ளை போலவே பார்த்தார். அவரது மனைவியும் அப்படியே. அவரது பிள்ளைகள் அனைவரும் என்னை அண்ணா அண்ணா என்று பாசமாக அழைக்கத் தொடங்கியதால் மனதில் ஒருவித சந்தோசம்.
இப்படியாக அவரது வீட்டில் சில காலம் தங்கினேன். பின் பளை இத்தாவில் பகுதியில் எமது இயக்கத்தினரிடம் பேசியதில் முக்கால் ஏக்கர் காட்டுடன் கூடிய காணி ஒன்று தந்தார்கள். அப்பா அம்மா சகோதரர்களின் தொடர்பு இல்லை. நான் ஒவ்வொரு நாளும் அந்தக் காணியிலுள்ள காட்டை வெட்டித் துப்பரவு செய்தேன். காலையில் சாப்பிட்டுவரும் சாப்பாடு மட்டும்தான். பின் வேலை முடிந்து அவர்களின் வீட்டிற்குப்போய் இரவுச்சாப்பாடுதான் சாப்பிடுவேன். அம்மா அப்பா அருகிலிருந்தால் பசிகிடப்பேனா.
இப்படியே அந்தக் காணியிலிருந்த காடு அனைத்தையும் வெட்டி துப்பரவு செய்து விட்டேன். இரண்டு மாதங்கள் கழித்து அப்பா அம்மா சகோதரர்கள் வந்திறங்கினார்கள். அவர்களும் அதே வீட்டில் சில நாட்கள் தங்க வேண்டியிருந்தது.
பின் அந்தக்காணியில் ஒரு சிறு வீடு கட்டி அங்கே குடியேறினோம். அக்கா தங்கை தம்பிகள் இருவரையும் பளை மகா வித்தியாலயத்தில் படிக்க வைத்தோம். கையிலிருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டதால் நான்தான் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டேன். பளையில் அப்போது யாரும் அறிமுகமில்லாததால் எமது இயக்க அலுவலகத்தில் வேலை தொடர்பாக உதவி கேட்டேன். அவர்கள் ஏற்கனவே அறிமுகம் என்பதால் பொறுப்பாளரின் தம்பியிடம் என்னைச் சேர்த்து விட்டார்.
அவர் பெயர் மணியம் மணி என்று அழைப்பார்கள். அவரின் அண்ணாவும் தம்பியும் எமது இயக்க உறுப்பினர்கள். என்னை அறிமுகப்படுத்தினார்கள் மணியண்ணா எனக்கு தந்த வேலை அங்கும் விறகு கொத்துவது.இதுதானே எனக்குப் பழகிப்போன வேலையாகிற்றே பிழந்து தள்ளிவிட்டேன். எனது வேலையைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். இந்த வயதில் இப்படி வேலை செய்கிறேன் என்று. சில காலம் அவருடனே வேலை செய்தேன். ஒரு நாளைக்கு 100 ரூபாய் தருவார் அப்போது அதுதான் ஆகக் கூடிய சம்பளம் எனக்கும் சந்தோசமாக இருந்தது.
1986ம் ஆண்டும் பிறந்து ஏழு மாதங்கள் கடந்தது. நான் மணியண்ணாவுடனேயே வேலை செய்தேன் எனது வேலையைப் பார்த்து இருவரும் சேர்ந்து விறகு வெட்டி உழவு இயந்திரத்தில் யாழ்ப்பாணம் கொண்டு சென்று விற்று வரும் பணத்தை பாதியாகப் பிரித்தெடுத்தோம். நல்ல பணப்புழக்கமாக இருந்தது.
இந்த நேரத்தில்தான் ஈ,பி,ஆர்,எல்,எப், தேசத் துரோகிகளுக்கும் எமது இயக்கத்திற்குமான சண்டை ஆரம்பித்தது. இரண்டு நாட்களாக கடுமையான துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தது. வெளியே வர முடியாமல் இருந்தது. எல்லாம் முடிந்து வேலைக்குப் போனேன் அங்கே ஈ,பி,ஆர்,எல்,எப், தேசத்துரோகிகளால் மணியண்ணா சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அவரின் அண்ணாவும் தம்பியும் எமது இயக்கம் என்பதால் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டனர். (சகோதரப்படுகொலை என்று கூறுகிறவர்கள் எத்தனை அப்பாவி மக்களைக் கொன்றார்கள் என்று பின்னர் தனிப் பதிவு செய்கிறேன்.)
சில நாட்களின் பின் மணியண்ணாவின் இளைய தம்பியும் நானும் சேர்ந்து அந்த வேலையைச் செய்தோம். ஒரு டீனேஜ் வயது இளைஞனுக்கு எவ்வளவு மனதில் ஆசைகள் இருக்கும் என்று அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியாதளவிற்கு குடும்பச் சுமை அதை நான் அந்த நேரத்தில் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் என் வாழ்நாளில் அத்தனையும் இழந்திருந்தேன். இனி அப்படி ஒரு வசந்தகாலம் என் வாழ்நாளில் வராது என்று எனக்குத் தெரியவும் மாட்டாது. நான் ஒரு அப்பாவியா அல்லது புத்தியில்லாதவனா என்று தெரியவில்லை. இப்படியே எனது வாழ்க்கை ஓடியது.
என்னடா இவன் சோகமாகவே போகிறான் என்று நினைக்க வேண்டாம். இந்த நேரத்தில் என்னையும் ஒரு பெண் நேசிக்கத் தொடங்கினார். அடுத்தவாரம் காத்திருங்கள்…
தொடரும் ……
நன்றி.
வே.சுபாஸ் தமிழீழம்
31.10.2020
பாகம் 01 பார்வையிட
பாகம் 02 பார்வையிட
பாகம் 03 பார்வையிட
பாகம் 04 பார்வையிட
பாகம் 05 பார்வையிட
பாகம் 06 பார்வையிட
பாகம் 07 பார்வையிட