ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான் – பாகம் 05
எனது அனுபவம் 1983
1983 ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் எனது படிப்பு 8ம் வகுப்புடன் முடிவுக்கு வந்தது. நான் முழுநேரம் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். ஏன் என்றால் இரண்டு பெண்சகோதரிகள் இரண்டு சிறுவயது தம்பிகள்.
இப்படியே நாட்கள் கடந்து மாதங்கள் கடந்து 1984 ம் ஆண்டும் பிறந்து. அப்போது நாங்கள் தம்பலகமத்திலேயே இருந்தோம். எமது கிராமத்தின் அரைவாசிப்பேர் சைனா பே. சீனன் குடாவில் ஒரு பாடசாலையில் தஞ்சம் புகுந்திருந்தனர். அங்கு எம்மைக் காட்டிக் கொடுத்த துரோகியானவன் சீனன் குடா விமானப்படையினருடன் இணைந்து அங்கும் அவனது காட்டிக் கொடுப்பு வேலையை செய்துள்ளான். அந்த முகாமிலிருந்த பெண்களை விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு கூட்டிக் கொடுக்கும் வேலையையும் செய்துள்ளான். அதில் பாதிக்கப்பட்டதில் எமது உறவுக்காரப் பெண்ணும் அடங்குவார்.
1984ம் ஆண்டு திருகோணமலைக்கு தமிழர் ஒருவர் அரசாங்க அதிகாரியாகப் பொறுப்பேற்று வந்தார். அவர் வந்து இடம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் சொந்த இடங்களில் குடியேற்றினார். 1984 ஏப்ரல் மாதம் என்று நினைக்கிறேன். நாங்களும் எமது சொந்த மண்ணில் மீண்டும் குடியேறினோம். எமக்கு U. N .H .C .R நிறுவனத்தினரால் வீடுகள் கட்டித் தந்தனர். எமது கிராமத்தில் இருந்த சிங்களக்குடும்பமும் வேறு ஒரு இடத்திற்குச் சென்று விட்டார்கள். அதனால் நாங்கள் கொஞ்சம் நின்மதியாக வீடுகளில் உறங்கினேம்.
வண்டிலும் மாடும் வாங்கியிருந்ததால் விறகு வெட்டி நகருக்குக்கொண்டு சென்று விற்பனை செய்வதை தொழிலாகக் கொண்டோம். இப்படியே மூன்று மாதங்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தோம்.
ஒரு நாள் திடீரென இராணுவத்தினரால் எமது கிராமம் சுற்றி வளைக்கப்பட்டு இளைஞர்கள் அனைவரையும் கைது செய்து பிளான்டன் பொயின்ட் இராணுவ முகாமிற்குக் கூட்டிச் சென்றுவிட்டனர். இதில் நானும் இன்னும் சிலரும் காட்டில் விறகு வெட்டச் சென்றதால் தப்பிவிட்டோம்.
மீண்டும் பிரச்சனைகள் வர ஆரம்பித்து விட்டதால் எமது வாழ்க்கை மீண்டும் கேள்விக்குறியாகி விட்டது. இப்டியாக இருக்கையில் எனது தந்தைக்கும் தீராத நோய் வந்து வேலைகள் செய்யமுடியாத நிலைக்குச் சென்றுவிட்டார். முழுக் குடும்பப் பொறுப்பும் எனது தலையில் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன். இதனிடையே தங்கையும் வயதிற்கு வந்துவிட்டதால் பயம் இன்னும் அதிகமாகி விட்டது.
இதனிடையே பக்கத்துக் கிராமத்திலும் இராணுவத்தினர் சுற்றிவளைத்து இளம் பெண்களையும் கைது செய்தனர். இதனால் பயம் அதிகமாகி விட்டதால் அம்மாவும் சகோதரிகள் இருவரும் தம்பிகள் இருவரையும் நகர்ப்பகுதியில் இருக்கும் பாலையூற்று என்னும் இடத்தில் இருந்த பரங்கியர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு நானும் அப்பாவும் எமது கிராமத்தில் தனியாக இருந்தோம். நான் சமைக்கவும் கற்றுக் கொண்டேன். இப்போது எனது அம்மாவை விட நான் மிகவும் சுவையாகச் சமைப்பேன்.
இந்தக் காலப்பகுதியில் புளோட் இயக்கம் (சோற்றுமுடிச்சு என்று சொல்வோம்). எமது கிராமத்தில் இருந்த ஒரு இளைஞரைக் கூட்டிக்கொண்டு சென்று விட்டனர். அதைக் கேள்விப்பட்ட பொலிசார் இராணும் மீண்டும் சுற்றிவளைத்தனர். நானும் அப்பாவும் காட்டிற்குள் ஓடிவிட்டோம்.
பொலிசார் எனது அப்பாவின் பெயரைக்கேட்டு பலரை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள். நல்ல வேளையாக நாங்கள் ஓடிவிட்டோம். நல்ல வேளை அம்மா சகோதரர்கள் வேறு இடத்தில் இருந்ததால் தப்பி விட்டார்கள்.
மூன்று மாதங்கள் இரவு பகலாகக் காட்டில் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். வண்டில் மாடு பராமரிப்பது மிகவும் ஆபத்தாக இருந்ததால் அதை விற்பனை செய்தார் அப்பா. இதன் பின் எமது கிராமத்தில் இருப்பது ஆபத்து என்று அங்கிருந்து சாம்பல் தீவு என்னும் கிராமத்துக்குச் செல்வதற்கு ஆயத்தமானோம்.
((இனித்தான் வாழ்க்கையின் போராட்டமே ஆரம்பம் அடுத்த கட்டத்தில்))
தொடரும்…..
நன்றி
வே. சுபாஸ் தமிழீழம்.
பாகம் 01 பார்வையிட
பாகம் 02 பார்வையிட
பாகம் 03 பார்வையிட
பாகம் 04 பார்வையிட