ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான்
எனது அனுபவம் 1982-1987
மாலை 4 மணியளவில் அவர்களின் பொறுப்பாளரும் அவருக்கு தமிழ் மொழி பெயர்ப்பாளரும் ஒரு வாகனத்தில் வந்திறங்கினார்கள். அவர்களின் பொறுப்பாளர் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவன் தலைப்பாகை கட்டியிருந்தான். வந்து இறங்கியதும் எங்களைப்பார்த்து ஏ தம்பி என்றான். இந்த ஒரு வார்த்தையைத்தவிர வேறு எந்த தமிழ் வார்த்தையும் தெரியாது அவர்களுக்கு.
அவர்களுக்கு மொழிபெயர்க்க வந்த தமிழ் இந்திய சிப்பாய் அவனைத் தமிழன் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும். அவன் எங்களைப்பார்த்து எந்திரிங்கடா நாய்களே என்று கூறியவாறு சப்பாத்துக்காலால் உதைத்தான். இந்திய இராணுவம் பாவிக்கும் சப்பாத்து ஹன்டர் என்று பெயர் அதற்கு முன்பகுதியில் இரும்பினாலான தகடு வைத்திருப்பார்கள். அவர்களிடம் அடி உதை வாங்கியவர்களுக்குத் தெரியும். நாங்கள் எழும்பி இருந்ததும் பொறுப்பாளர் சொல்வதை எங்களுக்கு தமிழில் கூறினான். நீங்கள் எல்ரீரீ தான் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையேல் உங்களைக் கொன்றுவிடுவோம் என்று கூறினான். நாங்கள் என்னதான் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மீண்டும் அடி உதை இப்போது அடிப்பதெல்லாம் அந்தத் தமிழ்ச் சிப்பாய்தான். அவன் எந்தப்பள்ளியில் படித்தானோ தெரியவில்லை நன்றாகக் கெட்ட வார்த்தைகளில் பேசினான்.
பின் மாலை 6 மணியாகியதும் இருள் சூழ்ந்துகொண்டிருக்கும்போது எனது அப்பாவும் நண்பரின் அப்பா அம்மா ஆகியோர் எங்களைத் தேடி வந்தனர். நான் எனது அப்பாவைக் கண்டதும் கத்தினேன். உடனே அப்பா என்னை கண்டுவிட்டார். பின் இராணுவப் பொறுப்பாளரிடம் ஆங்கிலத்தில் பேசினார். எனது தந்தை நன்றாக ஆங்கிலம் பேசுவார். ஆனால் எனக்கு இன்றுவரை ஆங்கிலம் தெரியாது. அவர் ஆங்கிலத்தில் பேசியதும் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்ததைப் பார்த்தேன். ஆனால் அந்த தமிழ் சிப்பாயின் முகத்தில் கோபத்தைக் காணமுடிந்தது. சற்று நேரத்தின் பின் எங்களை அப்பாவுடன் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். வீட்டிற்கு வரும்போது இரவு 7 மணி. காலை உணவுடன் பிடிபட்டோம். தண்ணீர்கூடத் தரவில்லை அந்த அமைதிப்படை என்ற அட்டூழியப்படை.
இப்படியே நாட்கள் நகர்ந்தது. ஒரு நாள் காலை 6.30 மணியளவில் இத்தாவில் வீதியில் எமது இயக்கப் போராளிகளால், ரோந்து வந்த இந்தியப்படையினர் மீது கிளைமோர்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில் 8 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர்.எமது வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரம்தான் வீதி பாரிய வெடிச்சத்தம் அதனுடன் மண்ணும் புகையுமாக காட்சியளித்தது. சில நொடிகளில் துப்பாக்கி வெடிச் சத்தங்கள் தொடர்ச்சியாகக் கேட்டவாறு இருந்தது. 20 நிமிடங்களின் பின் ஓய்ந்து விட்டது. எனக்கோ ஒன்றும் புரியவில்லை என்ன நடக்கிறது என்று. சற்று நேரத்தில் போராளிகள் எமது வீட்டின் பின் பக்கமாகச் சென்றார்கள். உடனே எமது கிராமம். இந்தியப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு வந்த படையினரின் அட்டகாசம் வாய்விட்டுச் சொல்லமுடியாத அளவிற்க்கு இருந்தது. இம்முறை பெண்களின் மீது தங்களது சேஸ்டைகளைப் புரிந்தனர். ஆண்கள் அனைவரையும் ஓர் இடத்தில் இருத்தி வைத்துவிட்டு வீடுகளுக்குள் புகுந்து பெண்களிற்கு தொந்தரவு கொடுத்தார்கள். இதில் பல தமிழ் இராணுவத்தினரும் வந்திருந்தார்கள்.
எம்மீது எவ்வளவு தாக்கினாலும் பரவாயில்லை பெண்கள் மீது அவர்களின் கைவரிசையைக் காட்டியது தாங்கமுடியாத வேதனையாக இருந்தது. பின் வழமை போல் நான் உற்பட இளைஞர்கள் அனைவரையும் இரண்டு கனரக வாகனங்களில் ஏற்றி எழுதுமட்டுவாளில் இருந்த அவர்களின் பிரதான முகாமிற்குக் கொண்டு சென்று கூடாரங்களில் கட்டிப்போட்டார்கள். வருபவர் போபவர் எல்லாம் சப்பாத்துக் கால்களால் மிதித்தார்கள். பிற்பகல் 2 மணியளவில் தமிழ் ஒட்டுக்குழுவைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் வந்தார்கள். அவர்களுக்கு இந்தியப் படையினர் பெருமதிப்புக் கொடுத்ததை அவதானித்தேன்.
அவர்கள் வந்ததும் எங்களை அவர்களின் பயிற்சி எடுக்கும் இடத்திற்கு கூட்டிவந்து இருத்தி வைத்தனர். அங்கு வந்த ஒட்டுக் குழு உறுப்பினர்களில் இரண்டு பேரை எனக்குத் தெரியும். அவர்கள் இருவரும் பளையில் இருந்த ஈ,பி,ஆர்,எல்,எப், அலுவலகத்தில் இருந்தவர்கள். எமது இயக்கம் அவர்களைத் தடை செய்ய முன்னர் அங்கு இருந்தவர்கள் என்னை அவர்களுக்கு நன்கு தெரியும். அதுமட்டுமன்றி நான் எமது இயக்க அலுவலகத்திற்கு அடிக்கடி சென்றுவருவதும் அவர்களுக்குத் தெரியும். சற்று நேரத்தின் பின் அடையாள அணிவகுப்பிற்காக எங்களை ஒன்றின் பின் ஒன்றாக இருத்தினார்கள். அதன்பின் ஒட்டுக்குழுக்கள் எங்கள் எல்லோரையும் பார்த்து தெரிவு செய்தார்கள். அதில் நான் உற்பட 7 பேர் அவர்களால் புலிகள் என்று முத்திரை குத்தப்பட்டோம்.
பின்னர் ஒட்டுக்குழுக்கள் எங்கள் 7 பேரையும் தனியாக எடுத்து வந்து அந்த முகாம் தென்னந் தோட்டத்தில் அமைந்திருந்தது. ஒவ்வொருவரையும் தென்னை மரங்களில் கட்டி வைத்து ஏற்கனவே அவர்கள் கொண்டு வந்த பனை மட்டையால் சரமாரியாக அடித்தார்கள். என்னால் எவ்வளவுதான் தாங்கமுடியும். நான் ஒப்புக் கொண்டேன் புலிகளுக்கு ஆதரவாக இருந்தேன் என்று. பின் ஒட்டுக் குழுக்கள் இந்திய இராணுவத்திடம் எம்மை ஒப்படைத்துவிட்டுப் போய் விட்டார்கள்.
மரத்தில் கட்டியபடியே இரவு 8 மணிவரை இருந்தோம். தண்ணீரும் தரவில்லை உணவும் தரவில்லை. எனது அப்பா முகாமிற்கு வெளியே நின்று இருக்கின்றார். என்னைக் காட்டவில்லை. இரவு 7 மணிக்குப் பின் எங்கோ இருந்து இந்தியப்படையின் உயர் அதிகாரி ஒருவன் வந்தான். அவன் கொஞ்சம் தமிழ் மொழிகலந்து ஏதோ ஒரு மொழியில் பேசினான். எங்களுக்கு ஓரளவிற்கு விளங்கியது அவன் பேசுவது. பின் கட்டை அவிழ்த்து விட்டு சாப்பாடு தந்தார்கள். ஆஹா அதுதான் சாப்பாடு…
தொடரும்…..
நன்றி.
வே.சுபாஸ் தமிழீழம்
21.11.2020.
பாகம் 01 பார்வையிட
பாகம் 02 பார்வையிட
பாகம் 03 பார்வையிட
பாகம் 04 பார்வையிட
பாகம் 05 பார்வையிட
பாகம் 06 பார்வையிட
பாகம் 07 பார்வையிட
பாகம் 08 பார்வையிட
பாகம் 09 பார்வையிட
பாகம் 10 பார்வையிட