ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான் – பாகம் 04
எனது அனுபவம் 1983
நான் மயக்க நிலையிலிருந்து எழுந்து பார்க்கும்போது அங்கு இரத்த வெள்ளத்தில் இரண்டு பேர் இறந்த நிலையிலும் இன்னும் 4 பேர் கடுமையான காயங்களுடன் துடித்துக் கொண்டுமிருந்தனர். அதைப் பார்த்து மீண்டும் எனக்கு மயக்கம் வர ஆரம்பித்தது. பின்னர் மாலை 5 மணியளவில் எனது அப்பாவும் ஊராரும் வந்து எங்களை மீட்டனர். என்னால் நடக்கக் கூட முடியவில்லை. அப்பா என்னை தூக்கிக் கொண்டு வந்தார். அதில் 13 பேரை கடற்படையினர் கடத்திக் கொண்டு போய்விட்டனர். திருகோணமலை டொக்யார் கடற்படை முகாமிற்கு அவர்களைக் கொண்டு சென்றார்கள். இன்றுவரை அவர்கள் தொடர்பான எந்த விதத் தகவல்களும் இல்லை.
எம்மைக் காட்டிக் கொடுத்த அந்த முகமூடி யார் என்றால் எமது கிராமத்தில் எங்களோடு வசிப்பவன்தான். நாங்கள் அப்போது அவனுக்குப் பயந்து வாழ வேண்டிய நிலையில் இருந்தோம். இன்றும் பல வசதிகளோடு வாழ்கிறான் அந்தத் துரோகி.
இப்படியே பகலில் வீட்டிலும் இரவில் காட்டிலும் வாழ்ந்து வந்தோம். அன்றும் நாங்கள் வழமைபோல் பாடசாலைக்குப் போனோம். எமது பாடசாலை 6 கி.மீற்றர் தூரத்தில் அனுராதபுரம் சந்தியில் இருந்தது. நாங்கள் பேருந்தில்தான் பாடசாலைக்குப் போய் வருவோம். அன்றும் வழமைபோல் பாடசாலைக்குப் போய் விட்டோம்.*( அன்றுதான் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இலங்கை இராணுவத்தினர்மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் முதன் முதலில் கன்னி வெடித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது அதில் 13 இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். ஜூலைக் கலவரம் ஆரம்பம்)
பாடசாலை நடந்து கொண்டிருக்கையில் திடீரென குண்டுச்சத்தங்கள் கேட்டது. உடனடியாக பாடசாலை மூடப்பட்டது எல்லோரையும் வீடுகளுக்குப் போகச் சொன்னார்கள். நானும் அக்காவும் தங்கையும் பேருந்து நிலையத்திற்கு வரும்போது கடைகள் வீடுகள் எல்லாம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. வீதிகள் எங்கும் சிங்களவர்களும் கடற்படையினரும் சில தமிழர்களைப் பிடித்து வைத்து வெட்டினர். எங்கும் இரத்த வெள்ளமாகக் காட்சியளித்தது. நாங்கள் வருவதைப்பார்த்த ஒரு சிங்களவன் எங்களை நோக்கி ஓடி வந்தான். நாங்கள் மூவரும் ஓடினோம். ஆனால் அவன் அக்காவை தலைமுடியில் பிடித்து விட்டான். நானும் தங்கையும் அக்காவைப் பிடித்து இழுத்ததில் அக்காவின் தலை முடி அறுந்து அவன் கீழே விழுந்து விட்டான். நாங்கள் அங்கிருந்து வேகமாக ஓடி பாலையுற்று என்னுமிடத்தில் அப்பாவுக்குத் தெரிந்த பறங்கியர் வீட்டுக்குப் போனோம். அவர்களுக்கு அவ்வளவாகத் தமிழ் தெரியாது. ஒரு வழியாக அவர்களிடம் பிரச்சனையைச் சொல்லி அவர்களது வீட்டில் இருந்தோம்.
இரவு 7 மணியளவில் அப்பாவும் மாமாவும் காட்டுப்பாதையூடாக நடந்து வந்து தேடி எங்களைக் கண்டுபிடித்தனர். அந்தக் காலத்தில் தொலைபேசி வசதிகள் ஒன்றுமில்லாத காலம். பின்னர் எங்களை அப்பாவும் மாமாவும் கூட்டிக் கொண்டு காட்டுப் பாதையூடாக வந்தனர். நாம் ஒரு சிங்களக் கிராமத்தைத் தாண்டித்தான் எமது கிராமத்திற்குப் போக வேண்டும். வரும் வழி பெரும் காடாக இருந்தது. எமது இடம் யானை, சிறுத்தைப்புலி, கரடி, பன்றி, பாம்புகள் என்று பல கொடிய மிருகங்கள் வாழும் காடு. அந்தக் காட்டுப் பாதையூடாக வந்து கொண்டிருக்கையில் ஒரு அருவி ஓடிக்கொண்டிருந்தது. அதில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கும் போது தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. அப்பா எங்களை இருத்திவிட்டு அவர் போய் பார்த்துவிட்டு வந்து ஒரு சிங்களவன் கள்ளச் சாராயம் காய்சுவதாகக் கூறினார். பின்னர் அப்பா மாமாவைக் கூட்டிக்கொண்டு போய் (அவனை???) வந்தனர் நாங்களும் புரிந்து கொண்டோம். நீங்களும் புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
இரவு 10 மணியளவில் எமது கிராமத்திற்குள் வந்தோம். அங்கே எமது வீடுகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி இருந்தது. அம்மாவும் தம்பி இருவரும் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் வழமையாக இரவில் தங்கும் இடத்திலும் அவர்கள் இல்லை. சத்தம் போட்டுக் கூப்பிடக் கூட முடியாது. பின் நாங்கள் வேறு ஒரு இடத்தில் தங்கினோம். மறு நாள் காலை எமது வீடுகளைப் பார்க்ப் போனோம். அங்கு சிங்களவர் எமது மிஞ்சியிருந்த பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டிருந்தனர். நாங்கள் அங்கிருந்து வெளியேறி தம்பலகமம் என்னும் இடத்திற்குக் கால் நடையாகப் போனோம். அங்கு எமது தூரத்து உறவுக்காரரின் வீட்டிற்குப் போனோம். அங்கே அம்மாவும் தம்பிகளும் இருந்தனர். அந்த சந்திப்பு மறக்க முடியாத ஓரு பாசப் பிணைப்பாக இருந்தது. ஏன் என்றால் நாங்கள் உயிர் பிழைத்து ஒன்றாகச் சேர்ந்த சந்திப்பு அது.
அங்கு இருப்பதற்கு இடம் கிடைத்தது. உணவுக்கு ஒன்றுமில்லாத நிலையில் உறவுக்காரர்கள் எங்களுக்கு உணவும் தந்தனர். பின் அப்பாவிடமிருந்த கொஞ்சப் பணத்தையும் போட்டு உறவுக்காரரின் உதவியுடனும் ஒரு வண்டில் மாடு வாங்கினோம் அப்பா அதில் நெல் ஏற்றிச் செல்வார். எனது படிப்பு 8ம் வகுப்புடன் முடிவுக்கு வந்தது. நான் வேளாண்மை அறுவடைசெய்யப் போவேன். கட்டுத் தூக்கும் போது என்னால் முடியாமல் இருக்கும் ஏன் என்றால் எல்லோரும் பெரியவர்கள் நான் மட்டும்தான் சிறுவயதாக இருந்ததால், எனக்குச் சம்பளமாக அரை மூடை நெல் தந்தார்கள். அந்தத் தருணம் முதன் முதலில் நான் வேலை செய்து சம்பளமாகப் பெற்ற நெல் …….
தொடரும்…..
நன்றி
வே.சுபாஸ். தமிழீழம்
பாகம் 01 பார்வையிட
பாகம் 02 பார்வையிட
பாகம் 03 பார்வையிட