தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!
(சிறப்பு வரலாற்று நெடுந்தொடர் பாகம் 76)
புலிகளிடம் அடிவாங்கி முதுகெலும்பு நொருங்கிய இந்திய படைகளில் போலிப் பிரச்சாரம்!
தமிழீழ தேசியத் தலைவரைக் குறிவைத்து இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி பின்நாட்களில் பல இந்தியப் படைத் தளபதிகள் செய்திகள், கட்டுரைகள், கருத்துக்கள் வெளியிட்டிருந்தார்கள். இந்தியப் படையின் உயரதிகாரியான லெப். ஜெனரல் எஸ்.சி. சர்மேஷ்பண்டே அவர்கள் 1992 இல் எழுதிய ‘அஸய்ன்மென்ட் ஜப்னா| (ASSIGNENT Jaffna) என்ற புத்தகத்தில் (Lancer Publication Pvt.Ltd)இந்தியப் படையினரின் முற்றுகைகள் பற்றி விரிவாக விபரித்துள்ளார்.
அதேபோன்று இந்தியப் படையின் மற்றொரு முக்கிய அதிகாரியான லெப்.ஜெனரல். திபீந்தர் சிங் எழுதிய ‘ஐ.பி.கே.எப். இன் ஸ்ரீலங்கா’ (I.P.K.F in Sri Lanka) என்கின்ற புத்தகத்திலும் (Thrishul Publication) , இந்திய இராணுவ ஆய்வாளர் ராஜேஷ் காடியன் எழுதிய ‘இந்தியாஸ் ஸ்ரீலங்கன் பியஸ்கோ’ (India’s Sri Lankan Fiasco- Peacekeepers atwar) என்கின்ற ஆய்வு நூலிலும் (Vision Books Pvt. Ltd), புலிகளுக்கு எதிரான இந்தியப் படையினரின் முற்றுகைகள், நடவடிக்கைகள் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை விட பல செவ்விகள் ஊடாகவும் புலிகளுக்கு எதிரான இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் பற்றி பல உண்மைகள் வெளியாகியுள்ளன. ஈழத்தில் படு தோல்வியடைந்து தாய்மண் திரும்பியிருந்த பல இந்தியத் தளபதிகள் இணையத்தளங்களுக்கு வழங்கிய செவ்விகளில், ஈழத்து நினைவுகளை அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். இந்தியாவின் பிரபல ஊடவியலாளர் ஜோசி ஜோசப் அவர்கள் இந்திய தளபதிகளின் அனுபவங்களை செவ்விகண்டு வெளிக்கொணர்ந்து இணைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.
பலர் தமது தரப்பு பின்னடைவுகளை மனச்சாட்சியுடன் வெளியிட்டிருந்தார். ஆனால் சிலரோ விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத வகையில் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். அவ்வாறு இந்தியப் படையின் நடவடிக்கைகள் பற்றி தனது செவ்வியில் கருத்து தெரிவித்திருந்த பலருள் ஏ.ஸ்.கல்கட் உம் ஒருவர்.
1988ம் ஆண்டு ஜனவறி முதல் இந்தியப் படை திருப்பி அழைக்கப்படும்வரை இலங்கையில் இந்தியப் படை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்து செயலாற்றிய உயரதிகாரிதான் லெப்.ஜெனரல் ஏ.எஸ்.கல்கட். இணையத்தளம் ஒன்றிற்காக இந்திய ஊடகவியலாளர் ஜோசி ஜோசப் அவர்களுக்கு கல்கட் அவர்கள் வழங்கிய செவ்வியின் சில பகுதிகளை இச்சந்தர்ப்பத்தில் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
கேள்வி: ஈழ யுத்தத்தில் இந்தியப் படைகள் அதிக இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றனவே. இவற்றைக் குறைத்திருக்க முடியாதா?
பதில்: சண்டையிலோ அல்லது யுத்தத்திலோ இழப்புக்கள் தவிர்க்க முடியாதது. சில இராணுவத்தினர் சண்டைகளின்போது உடற் கவசங்களைப் பாவிப்பார்கள். அப்படி உபயோகிக்கும் சில வீரர்கள் தமது உயிர்களை ஓரளவு காப்பாற்றிக்கொள்ளக் கூடும். ஆனால் எனது வீரர்களிடம் அந்த வசதிகள் அப்பொழுது இருக்கவில்லை. இல்லாத ஒன்றை கேட்கவும் முடியாது. உண்மையிலேயே அப்பொழுது எங்களிடம் கன்னிவெடிகளைக் கண்டுபிடிப்பதற்கான கருவிகளோ, பொறி வெடிகளைக் கண்டு பிடிப்பதற்காக தொழில்நுட்பக் கருவிகளோ கிடையாது. இந்திய இராணுவமே கூட பின்னர்தான் இதுபோன்ற கருவிகளைப் பெற்றுக்கொண்டது. நாங்கள் நாகலாந்து போன்ற இடத்தில் சண்டைபிடிப்பது போன்று இலகுவான ஒரு விடயமாக வன்னிச் சண்டைகள் இருக்கவில்லை. ஒரு சக்திவாய்ந்த, மோசமான ஒரு போராளிக் கூட்டத்தை நாங்கள் வன்னியில் எதிர்கொள்ளவேண்டி இருந்தது.
கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய விமானப் படை ஏன் முழு அளவில் பயன்படுத்தப்படவில்லை?.
பதில்: ஆகாயப் படை வீனான சிவிலியன் இழப்புக்களையே ஏற்படுத்தும் என்பதால் விமானப் படைப் பலத்தை நாங்கள் அதிகம் பிரயோகிக்கவில்லை. ஆட்டிலறிகளைக் கூட காடுகளை நேக்கிக் குண்டு வீசுவதற்கு மாத்திரமே நாங்கள் பயன்படுத்தினோம். அப்பொழுது எங்களிடம் பழைய எஸ்.எல்.ஆர் (SLR-Self Load Rifle) ரகத் துப்பாக்கிகள் மாத்திரமே இருந்தன. இது எதிர் கெரில்லாப் போரியலுக்கு ஏற்றாற்போன்று வடிவமைக்கப் பட்டிருந்திருக்கவில்லை. காடுகளுக்குள் இத்தகைய பெரிய நீண்ட துப்பாக்கிகளைக் காவிச் செல்லும்போது மரக்கிளைகளில் அவை சிக்கிக்கொள்ளும் தடைகள் ஏற்பட்டன. சுடும் வேகமும், சுடப்படும் ரவைகளின் எண்ணிக்கையும் இத்துப்பாக்கிகளைப் பொறுத்தவரையில் மிகவும் குறைவு. கெரில்லாப் போரை எதிர்கொள்வதற்கு ஏற்றாற்போன்று எமது இராணுவத்தினரிடம் ஆயுத வசதிகள் இருக்கவில்லை. இரவில் இருளிள் பார்ப்பதற்கான கருவிகள் எங்களிடம் இருக்கவில்லை. எம்மிடம் இருந்த தொலைத்தொடர்புக் கருவிகள் மிகவும் பாரமானவைகளாக இருந்தன. எம்மிடையேயான தொலைத்தொடர்புகளும், புலிகளுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டன.