இன்றோர் உறுதியேற்போம்!
முள்ளிவாய்க்கால்!
அல்லி வாய்க்கால் பரப்பெங்கும்
அழகாய்ப் பூத்து மணக்குமிடம்,
துள்ளி வாய்க்கால் நீரலையைச்
சுற்றி மீன்கள் பாயுமிடம்,
“முள்ளி வாய்க்கால்” என்னுமிடம்
முடிவில் தமிழர் இனத்துக்கே
“கொள்ளி வாய்க்கால்” ஆனதென்று
கூறிக் கூறி அழுவதென்னே!
வேரில் நீராம் விருந்தளித்து
விளையும் பசுமை தந்தவிடம்,
நீரில் குதித்து விளையாடி
நித்தம் பொழுதைக் கழித்தவிடம்,
ஊரின் மக்கள் துடிதுடித்து
உயிரைத் தொலைத்த அவ்விடத்தைப்
பாரில் வாழும் தமிழரின்று
பாடிப் பாடி அழுவதென்னே!
இரண்டு கரையை நிறைத்தபடி
எழிலை வாரி இறைத்தபடி
புரண்டு ஓடும் நீர்ப்பரப்பில்
பொழிலைக் கூட்டும் சீர்ப்பரப்பில்
மிரண்டு போகும் படியாக
மேன்மைத் தமிழர் செங்குருதி
திரண்டு ஓடும் நிலைகண்டு
தேம்பித் தேம்பி அழுவதென்னே!
கணமெங் கெங்கும் பேரெழிலைக்
காட்டி நடக்கும் அவ்விடத்தில்,
மனமெங் கெங்கும் இன்பத்தை
மலியச் செய்யும் அவ்விடத்தில்,
பிணமெங் கெங்கும் புரளுவதைப்
பிள்ளை நாமும் கண்டதினால்
இனமெங் கெங்கும் ஒப்பாரி
எடுத்து எடுத்து அழுவதென்னே!
செக்கச் சிவந்த பூக்கூட்டம்
சீறிப் பாயும் நீர்ப்பரப்பில்
திக்கி ழந்து மிதப்பதுபோல்
செம்மைத் தமிழர் மிதந்துவந்த
துக்கம் தாங்க முடியாமல்
தொல்லை ஒழிந்து விடியாமல்
விக்கி விக்கி இனஇதயம்
வெடிக்க வெடிக்க அழுவதென்னே!
போய்ச்சொல் இதுவெம் நிலமென்று
பொங்குந் துணிவில் தமிழ்மக்கள்
வாய்ச்சொல் திறந்து கேட்டதினால்
வன்மம் கொண்டுச் “சிங்கநரி”
மேய்ச்சல் நிலமாய் நம்மினத்தை
மேய்ந்த வலியைத் தாங்காமல்
கூச்சல் வானைக் கிழித்தெறியக்
கோலத் தமிழர் அழுவதென்னே!
கொன்றார்! பகைவர் அவராட்சிக்
கோலால் தமிழர் இனக்கறியைத்
தின்றார்! நம்மைத் திசையெல்லாம்
தேடித் தேடி வேட்டையாட
நின்றார் கூடி அதனாலே
நினைத்த தெல்லாம் அவரடைய
வென்றார்! நாமோ கூடாமல்
விழிநீர் கொட்டி ஆவதென்னே!
நன்றாய் உலகின் பேரறிவை
நாமும் அடைவோம்! அறிவாலே
ஒன்றாய் இணைவோம்! பொருள்செய்வோம்!
உள்ளங் கையில் கருவியேந்தி
வென்றே தீர்வோம்! எனவடியும்
விழிநீர்த் துளிமேல் ஆணைசெய்தே
இன்றோர் உறுதி நாமேற்போம்
இனிமேல் தமிழர் சிரிப்பதற்கே!
ஏறன் சிவா
விடை(வைகாசி)04, 2052
இலக்கியத்துறை
வள்ளுவப்_பண்பாட்டு_நடுவம்!